Saturday, June 25, 2011

சினிமா நட்சத்திரங்களுடன், ‘இனிமா’ போன் கால் அனுபவங்கள்

சினிமா நட்சத்திரங்கள் மீது பலருக்கு ஒரு ’அபார ஈர்ப்பு ’இருக்கும். ஆனால் சினிமா நிருபர்களுக்கோ அது ’அகோர கடுப்பாக’ இருக்கும்.

சமாச்சாரம் இதுதான்.

(பொதுவாக ’ஒரு சில’ அல்லது ’ப’ல நட்சத்திரங்களை மட்டுமே இது குறிக்கிறது, எல்லா நட்சத்திரங்களையும் அல்ல என்பதை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திவிடுகிறேன்.)

நம்ம கோலிவுட் நட்சத்திரங்களில் பலருக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஒரு அவசரத்திற்கு நாம் போன் செய்தால், மறு முனையில் தனது வீட்டிலோ, ஜிம்மிலோ அல்லது ஷூட்டிங் ப்ரேக்கிலோ அல்லது எங்கே இருந்தாலும் கூட, நமது போன் கால்லை எடுக்க மாட்டார்கள். (நம்மாட்களுக்கு ஹெல்த் கான்ஷியஸ் ரொம்பதான் அதிகம் போல. கையிடைப் பேசியில் அதிகம் பேசினால் புற்று நோய் வரும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் போலும்.). நாமும் விடாக்கண்டணாக எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும், எதிர்முனையில் ‘காந்திய’ பாலிஸி படி ஒரு இம்மியளவு கூட அவர்களிடம் எதிர்வினை இருக்கவே இருக்காது.

. ’இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்பா’ என்ற வடிவேலுவின் காமெடியை போல எவ்வளவு போன் கால் பண்ணினாலும், எஸ்.எம்.எஸ். பண்ணினாலும் ஆழ்கடல் போல அமைதியாக இருக்கும் அவர்களது அணுகுமுறை.


சில சமயங்களில் நாம் ஏதாவது விஷயத்தைக் கேட்டு போன் செய்தால்,
 ’ஜி இப்போ எடிட்டிங்ல இருக்கேன் அல்லது டிஸ்கஷன்ல் இருக்கேன். சாய்ந்தரம் கூப்பிடட்டுமா’ என்றபடி போன் கால்லை கட் பண்ணுவார்கள். மாலை ஆனதும், அவரது ஆட்களிடம் இருந்து போன் கால் வரும். ‘ சார்..அந்த மேட்டரை இப்போ வேண்டாம்னு சொல்றார். பின்னாடி பண்ணிக்கலாமே’ என்று சொல்லும் அந்தக் குரல். காரணம் அந்த நட்சத்திரத்துக்கு ‘கஜினி’ சூர்யா கதாபாத்திரத்தைப் போல ‘ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ்’ வந்திருக்கும். நம்முடைய நம்பரையோ, அல்லது நம்மை அவருக்கு ஞாபகம் இருக்காது. ஞாபகம் இருந்தால் அவரே போன் பண்ணியிருப்பாரே. அவர் நல்லவர் தான். பாவம் இப்படியொரு  மெம்மரி லாஸ் இருந்தால் என்னதான் பண்ண முடியும்?


ஆனால் ஒரேயொரு கிசுகிசுவையோ, அல்லது உண்மையில் நடந்த சமாச்சாரத்தையோ இரண்டே வரியில் எழுதி, அது பத்திரிக்கையில் வெளி வந்ததால் போதும்.

அதுவரை தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த அதே நட்சத்திரம்,  ஆழ்கடல் போன்று அமைதியாக இருந்த அதே நட்சத்திரம், ‘சுனாமி’ போல பொங்கியெழுவார். இரவு ஒரு மணியானாலும் சரி, அல்லது அதிகாலை நான்கு மணியானாலும் சரி (டைமிங்கை கவனிக்கவும். அதற்கு முன்பு ’என்ன ’ நடந்திருக்குமோ யாருக்குத் தெரியும்) நம் செல்போனுக்கு ‘டர்ர்ர்ர்ர்..’ரென்று தொடர்புக் கொள்வார். நாம் அசதியில் தூங்கிக் கொண்டிருப்போம். ஆனாலும் இப்போது அவர் ‘விடாக்கண்டன்’ கதாபாத்திரமாக மாறி தொடர்ந்து போன் பண்ணுவார்.

போனை எடுத்ததும், ‘என்ன ஜி..இப்படி வந்திருக்கு...அப்படி வந்திருக்கு. நான் எதுவும் பேசவே இல்லையே. உங்களுக்கு என்ன தெரியும்..’ என்று கதகளி, கதக், குச்சுப்புடி, சல்ஸான்னு எல்லா நடனங்களையும் கலந்து கட்டி, நம்மூர் டான்ஸ் மாஸ்டர்களுக்கே தெரியாத ஒரு ‘மார்க்கமான’ ஆட்டம் போட்டுவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போன் காலை கட் பண்ணிவிடுவார்.

ஒரு நல்ல விஷயம் எழுதினாலோ, அல்லது அவர்களது பேட்டியோ அல்லது அவர்கள் சம்பந்தமான ஒரு கட்டுரையோ வெளிவந்தால் அதற்கு மனதார வாழ்த்து தெரிவிக்கும் பழக்கம் நட்சத்திரங்கள் பலரிடம் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

இதுதான் யதார்த்தம்.

சினிமாவில் இப்படி பல ’இனிமா’ அதிகம். இனிமா அனுபவங்கள் தொடரும்...


Thursday, June 23, 2011

ஸ்நேகா நேர்க்காணல்



2000-ல் எந்தவிதமான பேக்கிரவுண்ட்டும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். இந்த பத்து வருடங்களில் நல்லப் பெயரை வாங்கியிருக்கிறேன். மலேஷியா, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா என நான் எங்கு சென்றாலும் எனக்கென ஒரு மரியாதை இருக்கிறது. credibility என்பது என்னைப் பொறுத்தவரை நம்பர் ஒன், நம்பர் டு இடமா என கேட்டால் அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமான இடத்தில்தான் இருக்கிறேன். இன்றைக்கும் ஐந்துப் படங்கள் பண்ணுகிறேன். இவ்வளவிற்கும் நான் கிளாமரான நடிகை இல்லை. ஹோம்லியான நடிகைதான்.”

அங்கீகாரம்?

தமிழ்ப் பெண்களுக்குக் கிடைக்கவேண்டிய சரியான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையோ என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது. தமிழ் ஹீரோயின் என்றால் அவர்களுக்கு தமிழ்ப் பேசத் தெரியக் கூடாது. ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோதான் பேச வேண்டும்.”


”சிலர் நீங்கள் பெரியப் படங்கள் எப்போது பண்ண போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எது பெரிய படம் என்று புரியாமல் அவர்களிடமே கேட்டால், பெரிய ஹீரோக்கள் படங்கள் என்கிறார்கள். சில நேரங்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட ஓடுவது இல்லை. சிறிய படங்கள் என்று சொல்லப் படுகிற படங்கள் பெரிய அளவில் ஓடுகின்றன. அப்படியென்றால் எதை நீங்கள் பெரிய படங்கள் என்று சொல்வீர்கள்? நான் நடிக்கிற படங்கள் பெரிய படங்களா என்று கேட்டால், எனக்குத் தெரியாது. ஆனால் நான் நடிக்கிறப் படங்கள் நல்லப் படங்கள். என்னுடைய கதாபாத்திரங்களைப் பார்த்தால் ஸ்நேகா நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்கிற மாதிரி என்னுடைய படங்கள் இருக்கும்.”

 ராசியில்லா நடிகையா?

”ஆரம்பத்தில் என்னுடைய சில படங்கள் ஓடாத போது ஸ்நேகா ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தினார்கள். பிறகு என்னுடைய ஹிட்ஸை பார்த்து, பெரிய பெரிய ஹீரோக்களுடன் படம் நடித்தப் போது அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. ஸ்நேகா நடிக்கிறப் படங்கள் பெரியப் படங்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் ஸ்நேகா படம் என்றால் எல்லா மக்களும் சென்றுப் பார்க்கக்கூடிய அளவிற்கு நல்லப் படமாக இருக்கும்.”

சர்ச்சை

நான் நடிக்க வந்ததிலிருந்தே நான் உண்டு என் வேலை உண்டு என ஓடிக்கொண்டே இருப்பேன். எவ்வளவு கிசுகிசுக்கள் வந்தாலும் ஒரு காதில் வாங்கிக் கொண்டு இன்னொரு காது வழியாக விட்டுவிடுவேன். காரணம் என்னுடைய அன்பான குடும்பம். அப்பா, அம்மா, பெரிய அண்ணன் குடும்பம், சின்ன அண்ணன் குடும்பம், அக்கா குடும்பம் என எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். இதனால் அவர்களுடைய சந்தோஷங்களைப் பார்க்கும் போது கிசுகிசுக்களைப் பெரிதாக நான் கண்டுக்கொள்ளவே இல்லை. 

ஆனால் சமீபகாலமாக என்னைக் காயப்படுத்தவேண்டுமென்றே கிசுகிசுக்களைக் கிளப்பி விடுகிறார்கள். கொஞ்சம் ஓவராகவே எழுதியும் இருக்கிறார்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எங்களுக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. ஸ்நேகா நடிக்க வந்துவிட்டாள் என்பதற்க்காக என்னைப் பத்தி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? ஒரு மனிதாபிமானம், நாகரிகம் வேண்டாமா? இதுவரை என்னப் பற்றி கிசுகிசுக்கள் வந்தப்போது நான் கண்டுக்கொண்டதே இல்லை. ஆனால் இனி நான் விடமாட்டேன். என்னைப் பற்றி தவறாக எழுதினால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். 

ஸ்நேகா என்றால் ரொம்ப அமைதியான பெண், நம்ம வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறாளே என்று சொல்வார்கள். அதனால்தான் இப்படி திரும்ப திரும்ப என்னைப் பற்றி அவதூறான கிசுகிசுக்களைக் கிளப்பி விடுகிறார்கள் போல. இனியும் நான் அமைதியான பெண்ணாக இருக்க மாட்டேன்.”

  நடிகைகள் என்றாலே விபச்சாரிகளா?

”நடிகைகள் விபச்சாரிகள் இல்லை. நிச்சயம் நடிகைகள் யாரும் அப்படி இல்லை. ஒரு டாக்டர் என்றால் அவருடைய வேலையைப் பார்க்கிறார். ஒரு டீச்சர் எப்படி அவர்களுடைய வேலையைப் பார்க்கிறாரோ அதைப் போலதான் ஒரு  நடிகை தன்னுடைய வேலையைப் பார்க்கிறார்.

 கேமராவிற்கு முன்னால் நின்று நடிப்பதால் அவர்கள் தப்பானவர்கள் என்று அர்த்தமில்லை. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. மரியாதை இருக்கிறது. அதனால் நடிகைகளை மட்டும் அப்படி தவறாகப் பார்க்காதீர்கள். மரியாதைக் குறைவாகப் பேசாதீர்கள்.

சுதந்திரம் இல்லையே..

 ஃப்ரெண்ட்ஸ்களுடன் பேசினால் அதையும் தவறாக நினைத்தால் எப்படி? நான் நடிக்கும் படங்களைப் பற்றி விமர்சனம் செய்யுங்கள். அதில் குறை இருந்தால் சொல்லுங்கள்.மேக்கப் சரியில்லையா? காஸ்ட்யூம் நன்றாக இல்லையா? நடிப்பு பிடிக்கவில்லையாஇதையெல்லாம் ஓபனாக சொல்லுங்கள். ஆனால் ஒரு சாதாரண பெண்ணிற்குக் கிடைக்கும் சுதந்திரமும், இடமும் ஒரு நடிகைக்குக் கிடைப்பதில்லை. ஒரு பெண்ணை யாராவது ராக்கிங் பண்ணினால், அதுபற்றி அந்தப்பெண் போலீஸில் புகார் கொடுத்தால் அதில் பிரச்னை ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கோ மற்றொரு நடிகைக்கோ பிரச்னை என்று புகார் கொடுத்தால், அதுவே ஒரு பெரியா பிரச்னை ஆகிவிடுகிறது.சாதாரண பெண்ணிற்கான சுதந்திரமோ, நியாயமோ நடிகைகளுக்கு இல்லை.

தமிழ்ப் பெண்கள் ஏன் நடிக்க வருவது இல்லையென கேட்கிறார்கள். அவர்கள் நடிக்கவராததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இது மட்டுமில்லாம தமிழ் நடிகைகளுக்கு தமிழ் பேசத் தெரியக் கூடாது. தமிழ் பேசத் தெரிந்தால் இங்கே மைனஸ். ஹலோ ஜி! சலொ... சலோ... என ஹிந்தியில் பேசினால் தான் இங்கு எடுபடும்.

விழாகளுக்கு செல்வதற்கு கூட பயமாக இருக்கிறது. அங்கே நம்முடைய ஃப்ரெண்ட்ஸை பார்த்து பேசினால் கூட அதைப் பற்றி கிசுகிசு எழுதிவிடுகிறார்கள். சிரித்து சிரித்து பேசுகிறார்க்ள் என்று போடுகிறார்கள். ஒன்றாக வொர்க் பண்ணியவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கக்கூடாதா?

இந்த பத்து வருடத்தில் ஐம்பத்திரெண்டு படங்கள் நடித்திருக்கிறேன். நான் இவ்வளவு சாதிக்க ஒரு ஏணிப்படியாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்தான். நீங்கள் என்னிடம் உள்ள குறைகளைச் சொல்லுங்கள், எந்த மாதிரி படங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நான் அவற்றை திருத்திக் கொள்கிறேன். என்னை வளர்த்து விடும் ஏணியான நீங்கள் நான் இன்னும் வளர உதவலாமே?”

கிளாமர்

”என்னை எந்த விதத்தில் கிளாமராக பார்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. நான் என் முட்டிக்கு மேல் இருக்கும்படியான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு நடித்தது இல்லை. ஸ்லீவ் லெஸ்ஸிற்கு மேல் இருக்கிற டிரெஸ் போட்டதும் இல்லை. என்னுடைய கிளிவேஜ்ஜை காட்டி நான் நடித்ததும் இல்லை. விரும்புகிறேன் படத்தில் எந்த அளவிற்கு கிளாமராக நடித்தேனோ அதேபோல் தான் இப்போதும் நடிக்கிறேன்.”

ஆதங்கம்.

சமையல் வேலைப் பார்க்கும் பெண்ணை ஹீரோ கமெண்ட் பண்ணினார் என எல்லோரும் பேசினீர்களே. ஒரு நடிகையின் படத்தை மார்ஃபிங் செய்து போடும் போது யாரும் தட்டி கேட்கவே இல்லையே. நடிகைகளும் பெண்கள்தானே.

கிசுகிசுக்கள்.

”நான் நடித்த படத்தின் விமர்சனம் வருகிறது என்றால் அதில் ஸ்நேகா நன்றாக நடித்திருக்கிறார் என்று ஒரு வரி மட்டும் எங்கேயாவது நடுவில் வரும். ஆனால் என்னைப் பற்றிய கிசுகிசு என்றால் மட்டும் ஆறேழு வரிகள் வரும். இதில் மட்டும் ஏன் கஞ்சத்தனம்.”

என் நண்பர்கள்.

”சேரன், ஷாம், பிரசன்னா, நரேன் இவர்கள்தான் என் நண்பர்கள். இவர்களுக்கு நான் என்ன பட்டுப்புடவை கட்டுகிறேன் என்ற பொறாமை இல்லை. அவர்கள் ஜீன்ஸில் வருவார்கள். இங்கே தமிழ் சினிமாவில் தான் attitude காட்டுகிறார்கள். ஒரு நடிகைகும் மற்றொரு நடிகைகும் இடையே ஒரு போலித்தனமான நட்பு இருக்கிறது. பொறாமை இருக்கிறது. ஒரு விழாவிற்கு வரும்போது சிரித்து பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை.

வெங்கட் பிரபுவை எனக்கு ஏப்ரல் மாதத்தில் படத்தின்போதேஅவர் இயக்குநராவதற்கு முன்பே நன்கு தெரியும். அதற்காக நான் அவரோடு போன மாதம் பேசினேன். நேற்று பேசினேன் என்று தினமும் அப்டேட் செய்யவேண்டுமாஎன்னுடைய நண்பர்களுடன் நான் பேசுவதைப் பற்றி எல்லோருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”

காதலா?

”ஸ்நேகாவிற்கு இவரோடு காதல், அவரோடு காதல் என்று நீங்களாகவே எழுதாதீர்கள். இதனால் நான் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன். பலருடன் பேசமுடியாமலும் போய் இருக்கிறது. இந்த மாதிரியான கிசுகிசுவால் நம்முடைய குடும்பத்திற்குதான் பிரச்னை என்று பேசாமல் போன நண்பர்கள் இருக்கிறார்கள்.”